மாணவியருக்கான கூடைப்பந்து போட்டி

கல்லுாரிகளுக்கு இடையிலான மாணவியருக்கான கூடைப்பந்து போட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது.

இதில், சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லுாரிகளின், மாணவியர் அணிகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். போட்டிகள் ‘நாக் – அவுட் மற்றும் ‘லீக்’ முறையில் நடந்தன.

முதல் ‘லீக்’ போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணி, 84 – 81 என்ற புள்ளிக்கணக்கில் கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரியையும், மற்றொரு ‘லீக்’கில் 78 – 43 என்ற கணக்கில் எத்திராஜ் அணியையும் வீழ்த்தியது.

கடைசி ‘லீக்’ சுற்றில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் எம்.ஓ.பி., வைஷ்ணவா அணிகள் எதிர்கொண்டன.

இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால், ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. முடிவில், 71 – 63 என்ற புள்ளிக்கணக்கில் எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி பெற்றது.

அனைத்து ‘லீக்’ ஆட்டங்கள் முடிவில், புள்ளிகள் அடிப்படையில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடத்தையும், கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

சென்னை எம்.ஓ.பி., வைஷ்ணவா மற்றும் எத்திராஜ் அணிகள், முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களை கைப்பற்றின